தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று கொடிகாமத்தில் இடம்பெற்றது.பல வருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் மூன்றாம் நாளான இன்று கொடிகாமம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு கொடிகாமம் பகுதியிலுள்ள மக்கள் தமது ஆதரவை வழங்கி கையெழுத்திட்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வட மாகாணத்தில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் கடந்த மாதம் 28 ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டதுடன் தொடர்ந்து மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டு, கடந்த நாட்களில் யாழிலும் முன்னெடுக்கப்பட்டது .இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமது கையெழுத்துக்களை இட்டிருந்தனர்.