கிளிநொச்சி - யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையிலீடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் 809 வழித்தட பேருந்து எதிர்வரும் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணம், மூளாயிலிருந்து சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலை முகாமையாளர் சிவபாதசுந்தரம் ஜீவானந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
அதற்கிணங்க மூளாயிலிருந்து அதிகாலை 5.30 க்கு மருதனார்மடம், உரும்பிராய் ,கோப்பாய் கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி, முட்கொம்பன், பரந்தன், கிளிநொச்சி வரை முன்னெடுக்கப்பட்ட பேருந்து சேவை எதிர்வரும் 15ம் திகதி முதல் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது. காலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்து கைதடி, சாவகச்சேரி, தனங்கிழப்பு, பூநகரி முட்கொம்பன், அக்கராயன், முறிகண்டி ஊடாக கிளிநொச்சி பேருந்து நிலையத்தை அடையவுள்ளதுடன் மீண்டும் 12.40 ற்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு குறித்த பகுதியூடாக யாழ்ப்பாணத்தை அடையவுள்ளது.