இந்தோனசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் அனர்த்தத்தில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனசியாவின் மத்திய ஜாவா பகுதியில் பலத்த மழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த மழை மற்றும் கடும் பனி காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும் இன்று காலை முதல் மீண்டும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலச்சரிவில் வீடுகள் மற்றும் வீதியால் சென்ற வாகனங்களும் சிக்கி புதையுண்டுள்ளன. ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் மேற்கு ஜாவா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருந்ததுடன் வடக்கு சுமாத்தரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதே பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து நிலச்சரிவில் சிக்கியதில் சுற்றுலாப் பயணிகள் 9 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.