மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு

மூன்று நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு

கேகாலை மாவட்டத்தில் எஹி பஸ்ஸிகோ அமைதி நடைப்பயணம் நடைபெறவுள்ள காலப்பகுதியில், அனைத்து மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களை 3 நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டச் செயலகத்தில் நேற்று ( 22) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி நாளை 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும்.

24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை

சுற்றுச்சூழல் அமைச்சரும் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான தம்மிக படபெந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சபரகமுவ மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

கடுகண்ணாவ முதல் வரக்காப்பொல வரையான பிரதான வீதியை அண்டிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கே இந்த உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமைதி நடைபயணம் மற்றும் ஆன்மீக யாத்திரை நடைபெறும் காலப்பகுதியில், கொழும்பு – கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் ஒலிப்பான்களை (Horns) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நாட்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *