மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியில் அமைந்துள்ள மிளகாய் தோட்டமொன்றிலிருந்து, ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சனிக்கிழமை (18) மாலை வரை தனது தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, அங்கிருந்த வாடியிலேயே (குடிசை) உறங்கியுள்ளார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை இரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்ட உறவினர்கள், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அவர் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளதால், இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம்.றியாஸ் தலைமையிலான குழுவினர் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப்குமார, பொலிஸ் தடயவியல் பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
