தமிழர் பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்

தமிழர் பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்

அம்பாறை, திருக்கோவிலில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது சாணம் வீசி, கத்தியால் வெட்டி தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் சனிக்கிழமை (25) உத்தரவிட்டது.

கள்ளியந்தீவு பகுதியைச் சேர்ந்த, மதுபோதைக்கு அடிமையான 30 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றி வரும் அதிகாரி, கடந்த வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.00 மணியளவில் மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

இதன்போது, பாடசாலைக்கு அருகில் கத்தியுடன் நின்றுகொண்டிருந்த சந்தேகநபர், வீதியால் சென்ற பெண் பொலிஸ் அதிகாரி மீது மாட்டுச் சாணத்தை வீசி எறிந்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். இது குறித்து அந்த அதிகாரி தனது மேலதிகாரிக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், குறித்த நபரை பெண் பொலிஸ் அதிகாரி பின்தொடர்ந்து சென்றபோது, மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் அவர் கத்தியைச் சுழற்றி அச்சுறுத்தியுள்ளார். அவரிடமிருந்து கத்தியைப் பறிக்க முற்பட்டபோது, அதிகாரி மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்ததுடன் சீருடையும் சேதமடைந்த போதிலும்,  அந்த அதிகாரி சந்தேகநபரை மடக்கிப் பிடித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதால், அவரைப் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக குறித்த பெண் பொலிஸ் அதிகாரி மீது கோபமடைந்த அந்த இளைஞன், அண்மையில் அவர் வீதியால் செல்லும்போது வைத்தியசாலைக்கு அருகில் வைத்துச் செருப்பால் எறிந்துள்ளார். அத்துடன் அந்த அதிகாரியின் வீட்டின் மீதும் அவ்வப்போது கல்வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *