இலங்கையில் மீண்டும் அதிகரிக்குமா எரிபொருள் விலைகள்

 

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையை திருத்தியமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தங்களின்படி, இவ்வாறு எரிபொருள் விலையை திருத்தியமைப்பதில் எந்தவித சட்டத் தடைகளும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதல்களால் கடல்வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக இறக்குமதிச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால், தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வது கடினமாக உள்ளதாகத் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, IOC, Sinopec மற்றும் RM Parks உள்ளிட்ட தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் இந்த விவகாரத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் (CPC) மூலம் விற்பனை செய்யப்படும் எரிபொருளுக்கான அதிகரித்த செலவை முழுமையாக நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்றும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment