அஸ்வெசும நிவாரணக் கொடுப்பனவுகளில் ரூ.01 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக, அட்மையில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண் அதிகாரிகள் ஹற்றன் பிராந்திய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 25 இலட்சம் என கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைய விசாரணையில் குறித்த விடயம் அம்பலமாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.01 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹற்றன் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
உண்மையான பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அஸ்வெசும நிதியை, தங்களது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி வரவு வைத்ததன் மூலம் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கணக்குப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளாவர்.
இதைத் தொடர்ந்து, பிரதேச செயலாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஹற்றன் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனுடன், நுவரெலியா மாவட்டச் செயலாளரின் ஆலோசனையின் பேரில் உள்ளக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சந்தேக நபர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றையவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்
கைது செய்யப்பட்ட இரு பெண் அதிகாரிகளும் 30 மற்றும் 33 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த மோசடி தொடர்பில் மேலும் சிலரின் தொடர்பு குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
