தமிழர் பகுதியில் கொடூர விபத்து பெண் சம்பவ இடத்திலே பலி-இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்

 

திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியில் நேற்று (27) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். 

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 01 பிரதான வீதியில்இ திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பயணிகளுடன் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் வவுணதீவுப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் உடனடியாகத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக மேலதிக தீவிர சிகிச்சைக்காக அவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment