இந்தியா ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டம், நாயுடுப்பேட்டை பகுதியில் பாடசாலை மாணவியை ஏமாற்றி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி ஒருவர் பாடசாலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, விண்ணமாலா கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மாணவியை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமல், பிரதவாடா கிராமம் அருகிலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகமடைந்த மாணவி, ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதற்கு ஆத்திரமடைந்த சந்தேகநபர் அவரை கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், வனப்பகுதியில் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன் பின்னர், மாணவியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி அவரது வீட்டருகே இறக்கிவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி நாயுடுப்பேட்டை காவல்துறையில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள சந்தேகநபர் ராகேஷை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
