விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

இந்த ஆண்டு சிறுபோக நெல்லை கொள்முதல் செய்ய ரூ. 6,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சகத்தில் நெல் ஆலை உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சந்திப்பிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய சமரசிங்க, அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்ய கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும், இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஒரு கிலோகிராம் நாடு நெல்லை ரூ. 120-க்கும், சம்பா நெல்லை ரூ. 130-க்கும், கீரி சம்பா நெல்லை ரூ. 140-க்கும் கொள்முதல் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு, உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்யத் தயாராக உள்ளனர். இந்தத் திட்டத்தை நாம் வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், அரிசி விலைகளைக் குறைக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்," என்று அமைச்சர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கலந்துரையாடல்களின் போது ஆலை உரிமையாளர்கள் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாகவும், அவை இரண்டு வாரங்களில் நடைபெறும் தொடர் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளாார்.

Post a Comment