2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
உயர்தரப் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளுதல் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்குரிய வலயக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், சகல அதிபர்களும் தமது பாடசாலைக்குரிய வலயக்கல்வி அலுவலகங்களிலுள்ள பரீட்சைக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளரிடம் அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எந்தவித தாமதமுமின்றி பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகளை அவர்களுக்கு உனடியாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகள் தமது அனுமதி அட்டைகளை தத்தமது பாடசாலை ஊடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது அனுமதி அட்டைகளை தாமே இன்று (24.07.2026) தொடக்கம் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.Ik இற்குள் நுழைந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அனுமதி அட்டை கிடைக்கப்பெறாத அல்லது அனுமதி அட்டையை தரவிறக்கம் செய்ய முடியாத தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பிரதியையும் பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டின் நிழற்பிரதி அல்லது பரீட்சைக் கட்டணம் செலுத்தியமைக்காக அஞ்சல் அதிபரினால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்திய கடிதம் ஆகியவற்றுடன் பரீட்சைத் திணைக்களத்திற்கு வருகைதரல் வேண்டும்
அதிபருக்கோ அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரிக்கோ கிடைக்கப்பெற்றுள்ள அனுமதி அட்டையிலுள்ள பாடம், மொழிமூலம், பெயர் என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருப்பின், சகல திருத்தங்களும் நிகழ்நிலையூடாக மேற்கொள்வதுடன் அதற்காக https://onlineexams. gov.lk/eic எனும் இணையத்தளத்தினுள் நுழைய வேண்டும்.
ஒரு திருத்தமொன்றை ஒரு தடவை மட்டுமே மேற்கொள்ள முடியும். இப் பரீட்சைகளுக்குரிய பரீட்சை நிலையங்களை மாற்றம் செய்ய முடியாது. திருத்தங்களை மேற்கொள்ளுதல் 03.08.2026 நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகளின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியன ஏற்றுக்கொள்ளப்படும்.
