14 கலியாணம்-நூதன மோசடி-பேரழகி தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளார். 

இந்த சம்பவம் தெலுங்கானா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 22 வயதுடைய ஸ்வேதா என்ற பெண் சொந்த ஊர் தெலுங்கானாவில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனை திருமணம் செய்தார். 

சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரைப் பிரிந்தார். அதன் பிறகு பெற்றோரும் உறவினர்களும் அவரை ஏற்க மறுத்தனர். தனியாக விடப்பட்ட ஸ்வேதா, ஒரு விடுதியில் தங்கி சூப்பர் மார்க்கெட் பில்லிங் கவுண்டரில் வேலைக்குச் சேர்ந்தார். 

அப்போது தான் இவரது வாழ்க்கை திசை திரும்பியது. பழக்கமான ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டு இரண்டாவது திருமணம் செய்தார். திருமணத்தின் போது 15 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. “எனக்கு பெற்றோர் இல்லை. அனாதை. விடுதியில் தனியாக இருக்கிறேன்” என்று பல உண்மைகளை மறைத்து திருமணம் செய்தார். 

திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே அந்த 15 சவரன் நகைகளையும் வீட்டில் இருந்த 30,000 ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு காணாமல் போனார். புகார் கொடுக்கப்பட்டாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. 

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் ஸ்வேதா இதை ஒரு “தொழில்” ஆக்கிக்கொண்டார். கொள்ளையடித்த நகைகளையும் பணத்தையும் வைத்துக்கொண்டு அருகில் உள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றார். 

அங்கெல்லாம் “நான் அனாதை. சிறுவயதிலேயே பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஆசிரமத்தில் வளர்ந்தேன்” என்ற பொய்களைச் சொல்லி ஆண்களை வசப்படுத்தினார். திருமணம் செய்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நகைகளையும் பணத்தையும் சுருட்டி மீண்டும் மறைந்துவிடுவது இவரது வழக்கமாக மாறியது. 

இவருக்கு ஏமாற்றப்பட்ட பெரும்பாலான ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பியவர்களாக இருந்தனர். மேட்ரிமோனி தளங்களைப் பயன்படுத்தினார். புகைப்படம் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் விளம்பரம் போட்டார். 

ஏன் புகைப்படத்தை பதிவு செய்யவில்லை என கேட்பவர்களிடம், “யாராவது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்திவிடுவார்களோ என்ற பயம்” என்று பேசி ஆண்களைக் கவர்ந்தார். இப்படி 14 திருமணங்கள். மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகள். 

கடந்த மார்ச் மாதம் இவர் செய்த மிகப்பெரிய தவறுதான் இவரைச் சிக்க வைத்தது. தெலுங்கானாவைச் சேர்ந்த வைத்தியர் ராஜேஷ் குமார் (35). முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்திருந்த அவர், இரண்டாம் திருமணத்திற்காக மேட்ரிமோனி தளத்தில் விவரங்களைப் பதிவு செய்திருந்தார். 

ஸ்வேதா அவரைத் தொடர்புகொண்டு வழக்கம்போல தனது “அனாதைக் கதையை” சொல்லி திருமணம் வரை கொண்டுவந்தார். திருமணத்தின்போது 60 சவரன் நகைகள் அணிவிக்கப்பட்டன. 

இரண்டு நாட்கள் மட்டும் வைத்தியர் ராஜேஷுடன் தங்கினார். பிறகு கிட்டத்தட்ட 80 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டார். ஆனால் இந்த முறை விஷயம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. 

வைத்தியர் ராஜேஷின் தாய் மாமா இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஒரு பொலிஸ் அதிகாரி. திருமணத்திற்கு முன்பே ஏதாவது பிரச்சனை வரலாம் என்ற சந்தேகத்தில் ஸ்வேதாவின் தொலைபேசியில் எதற்கும் இருக்கட்டும் நம் பாதுகாப்பு முக்கியம் என மறைமுகமாக டிராக்கிங் ஆப் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தார். 

நகைகளுடன் தப்பிய ஸ்வேதா அடுத்ததாக கோவாவுக்குச் சென்று தங்கியிருப்பது அந்த ஆப் மூலம் தெரியவந்தது. 

உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது. கோவாவில் அந்த தொலைபேசி சிக்னல் காட்டிய இடத்தில் ஸ்வேதாவைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் அதிர்ச்சியான ஒன்றைச் சொன்னார், 

“வெப் சீரியஸ்களைப் பார்த்து இந்த யோசனை வந்தது. இப்படி கொள்ளை அடித்து வாழலாம் என்று முடிவு செய்தேன்." தற்போது ஸ்வேதாவிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதுவரை ஏமாற்றப்பட்ட ஆண்களின் புகார்கள் ஒவ்வொன்றாகச் சேர்க்கப்பட்டு வருகின்றன.

Post a Comment