உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன, மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் புதிய முன்பதிவுகளுக்கு 15% முதல் 20% வரை கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட உணவுப் பொதிகளுக்கு 10% விலையேற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
பொருட்களின் விலை அதிகரிப்பால் தமது தொழில்துறை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், இத்துறையைப் பாதுகாப்பதற்காகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், தமது பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து முறையான தீர்வு அல்லது நிவாரணம் கிடைக்குமாயின், இந்த விலையேற்றத்தை மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
.jpeg)