வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள தனியார் காணிகளையும், முறையாக விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
அதன்படி, மத வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது, கேட்டறிந்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1000 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஏனைய காணிகளையும் முறையாக விடுவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்மக்களின் இயல்பு வாழ்வை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வகையில் காணிகளை விடுவிக்கும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்காக தற்போதுள்ள காணிகளை முகாமைத்துவம் செய்து கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் போதும், மூடப்பட்டுள்ள வீதிப் பகுதிகளைத் திறக்கும் போதும் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
