மஹரகம பகுதியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர், சிறுவர்களை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹோரண, பெல்லபிட்டிய பகுதியில் வீடொன்றை வாடகைக்கு எடுத்த 50 வயதுடைய தொழிலதிபர் இவ்வாறான செயலை செய்துள்ளார்.
நீண்டகாலமாக இந்த செயலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். ஹோரண நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் கே.பி.ஆர். லக்மினி விதானகமகே விளக்கமறியலில் வைக்க உத்தரவைப் பிறப்பித்தார்.
குறித்த தொழிலதிபர் தனது நண்பரின் மூலமாகவே இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அத்துடன், அந்த நண்பரின் 13 வயதுடைய மகன் மற்றும் அவரது வயதுடைய ஏனைய சிறுவர்களை இந்த தொழிலதிபர் தவறாக பயன்படுத்தியுள்ளார்.
கடந்த 3 மாதங்களாக தொடர்ந்த இந்த செயலில், பாதிக்கப்பட்ட சிறுவன் வாரத்திற்கு இருமுறை வீதம் கடுமையான பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வழங்கிய தகவல் மூலமே இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7ஆம் திகதி குறித்த தொழிலதிபர் சிறுவன் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தபோது, சந்தேகமடைந்த அண்டை வீட்டார் 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
