மண்ணடி கோவில் திருவிழாவில் துயரம்.! - தேர்சக்கரத்தில் சிக்கி 24 வயது இளைஞர் பலி...!
மண்ணடி பகுதியில் உள்ள பழமையான மல்லிகேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டம் சோகமாக மாறிய பரிதாப சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 29ஆம் தேதி கோவிலில் நடைபெற்ற தேர்ப் பவனியின் போது, தேரை இடைவிடாது கட்டுப்படுத்த சக்கரத்தின் கீழ் மரத்தடுப்பு கட்டைகளை அமைக்கும் பணியில் மண்ணடி புது தெருவைச் சேர்ந்த 24 வயதான குபேந்திரன் ஈடுபட்டிருந்தார்.
அந்த நேரத்தில், தேரின் வலது சக்கரத்திற்கு தடுப்புக் கட்டை வைக்க முயன்றபோது திடீரென சமநிலை இழந்த குபேந்திரன் கீழே விழுந்து, எதிர்பாராத விதமாக தேர்சக்கரத்தில் சிக்கி கடுமையாக காயமடைந்தார்.
இந்த காட்சியை கண்டு பதற்றமடைந்த பொதுமக்கள், ரத்தக் குளத்தில் தவித்த அவரை அவசரமாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைகளும் பலனளிக்காமல், குபேந்திரன் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஒரு திருவிழாவின் ஆனந்த தருணம் இவ்வாறு சோகமாக முடிவடைந்த இந்த சம்பவம் மண்ணடி முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
