இலங்கைக்கு பொருளாதார எச்சரிக்கை ; எரிபொருள் விலை சூத்திரத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்

 

மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும் என பிரபல பொருளியலாளர் தலால் ரஃபி சுட்டிக்காட்டியுள்ளார்‌.

அண்மைய பூகோளப் பதற்றநிலைகளால் இலங்கையும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் நிலவும் பின்னணியில், குறிப்பாக எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

மத்திய கிழக்கில் உருவாகியிருக்கும் போர்ச்சூழல் மற்றும் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து இலங்கை சிந்திக்கவேண்டும்.

எரிபொருள் நிவாரணங்களுக்குப் பதிலாக நலிவுற்ற சமூகப்பிரிவினருக்கு நேரடியாக நிதியுதவி வழங்குவதை நான் எப்போதும் ஆதரிப்பவன் என்றாலும், தற்போதைய அசாதாரண சூழ்நிலை குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்குத் தெளிவுபடுத்தவேண்டும்.

அதேபோன்று விலை சூத்திரத்தை தற்காலிகமாக நிறுத்தாவிடின், சந்தை நிலைவரப்படி எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வடையும்.

போர் ஆரம்பமானதிலிருந்து மசகு எண்ணெய் விலை 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இது பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளில் பிரதிபலித்தால் போக்குவரத்து மற்றும் ஏனைய விநியோகச்செலவுகள் உயர்வடைந்து, உணவுப்பொருட்களின் விலைகளும் மிகவேகமாக அதிகரிக்கும்.

பேக்கரி மற்றும் உணவக உரிமையாளர்கள் விலையை உயர்த்திய பின்னர், எரிபொருள் விலை குறைந்தாலும் மீண்டும் விலையைக் குறைக்கமாட்டார்கள்.

எனவே இது நிரந்தர விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதேவேளை எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துவதால் அரசாங்கத்துக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பது உண்மைதான்.

இருப்பினும் வாகன இறக்குமதி வரி மற்றும் மூலதனச் செலவினங்கள் குறைவாக இருந்ததன் காரணமாக அரசாங்கத்திடம் இப்போது போதிய நிதிக்கையிருப்பு உள்ளது. தற்காலிகமாக 2 - 3 மாதங்களுக்கு விலையை ஸ்திரமாகப் பேணினால், நீண்டகால அடிப்படையில் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புக்களைத் தவிர்க்கலாம்.

ஏனெனில் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்தால், அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இது அரசாங்கத்தின் மீள் உருவாகும் செலவுகளை நிரந்தரமாக உயர்த்திவிடும். அத்தோடு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதங்களை அதிகரிக்கவேண்டியிருக்கும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

இலங்கையில் ஏற்கனவே 25 சதவீத மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இந்தத் திடீர் விலை உயர்வைச் சமாளிக்கும் சக்தி பலருக்கு இல்லை. எனவே எதிர்பொருள் விலை சூத்திரத்தை நிறுத்திவைப்பது 3 மாதங்களுக்கு மட்டுமேயான ஒரு தற்காலிக நடவடிக்கையாக இருக்கவேண்டும்.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.