செஞ்சியின் அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தின் அருகே நெடுஞ்சாலையில் விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று, அதிகாலை நேரத்தில், இந்த நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் வினோத், ராஜா, சேகர் மற்றும் ஜெயவேல் ஆகிய நான்கு பேர் பயணித்தனர். சம்பவ இடத்தில் கார் வந்துகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பக்கத்தில் இருந்த கிணற்றில் விழுந்துள்ளது. சில நொடிகளில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் என்ன நடக்கிறது என எதுவும் புரியாத அவர்கள், காருடன் சேர்ந்து நீரில் மூழ்கினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும், நீரில் மூழ்கித் தப்பிக்க வழி இல்லாத அவர்கள் நீண்ட நேரம் உயிருக்குப் போராடியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திலேயே வினோத், ராஜா மற்றும் ஜெயவேல் ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் பரிதாபமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த செஞ்சி காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கிணறுகளைச் சுற்றித் தடுப்புச் சுவர்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சில கிணறுகள் இன்னும் தடுப்பு சுவர்கள் கட்டப்படாத நிலையில் உள்ளன. இது விபத்துக் காலங்களில், உயிரைப் பறிக்கும் நிலையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
