ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் நாடாளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி, அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பதற்கான முதற்கட்ட சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , விரைவில் சட்டத்துறையினால் அது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை ஈரான் உறுதிப்படுத்துவதால், அதற்குக் கைமாறாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.அதேவேளை மற்றைய போக்குவரத்து வழித்தடங்களைப் போலவே, ஒரு நாட்டின் எல்லைக்குள் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது வரி செலுத்தப்படுவது இயல்பானது என ஈரான் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, தற்போதைய போரை நிறுத்துவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஐந்து நிபந்தனைகளில் ஒன்றாக, "ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் அதிகாரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்" என்பதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகவே இடம்பெறுவதால், ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
