நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள உலக முடிவு (World’s End) பகுதியில் நேற்று இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 9 பேர் கொண்ட மாணவர் குழு சுற்றுலா நோக்கில் அந்த பகுதிக்கு சென்றிருந்தது. அப்போது, 23 வயதுடைய மாணவி ஒருவர் ‘செல்பி’ எடுக்க முயன்றபோது சுமார் 40 மீற்றருக்கும் அதிகமான ஆழமுள்ள பள்ளத்தாக்கிற்குள் தவறி சரிந்து விழுந்துள்ளார்.
அந்த வேளையில், மாணவர்களை அழைத்துச் சென்ற நுவரெலியாவைச் சேர்ந்த வாகன சாரதி பிரான்சிஸ், “பொடி மல்லி” என அறியப்படும் அவர், தன்னுடைய உயிரையே பணயம் வைத்து உடனடியாக பள்ளத்தாக்கிற்குள் இறங்கியுள்ளார்.
சுமார் 1 மணித்தியாலத்திற்கும் மேலாக, கீழே விழுந்திருந்த மாணவியை தாங்கிப் பிடித்தபடி, இராணுவத்தினர் வரும்வரை அவர் துணிச்சலுடன் காத்திருந்தார். பின்னர் மீட்பு குழுவினரின் உதவியுடன் மாணவி பாதுகாப்பாக மேலே கொண்டு வரப்பட்டார்.
இந்த தைரியமான மற்றும் பொறுப்பான செயல் காரணமாக, வாகன சாரதி பிரான்சிஸுக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்த சம்பவம், சுற்றுலா பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடிப்பதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.
காயங்களுடன் உயிர் தப்பிய அந்த மாணவி தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.







