ஈரானின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கிறது. இந்த வழியாகக் கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காக, தற்கொலைப்படை ட்ரோன் படகுகளை அதிகளவில் கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி, "ஏவுகணை நகரம்" என்று வர்ணிக்கப்படும் நிலத்தடி வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது.ஈரானிய இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான கடல் ட்ரோன் படைகள் தற்போது Strait of Hormuz வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் அரசு தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில், நீண்ட சுரங்கப்பாதைகள் முழுவதும் கடற்படை ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடல் கண்ணிவெடிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சில ஆயுதங்கள் ஏவப்படும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டன என்பதும், இந்த இடங்கள் அமெரிக்க அல்லது இஸ்ரேலிய படைகளால் தற்போது தாக்கப்பட்டதா என்பதும் உறுதிபட தெரியவில்லை.ஆளே இல்லாமல் இயக்கப்படும் இந்த வகை சிறிய படகுகள் காணப்படுகின்றன. நீரின் மேற்பரப்பிலோ அல்லது சற்று அடியிலோ பயணிக்கும் இந்தச் சிறிய படகுகள், வெடிபொருட்களைச் சுமந்து சென்று இலக்கின் மீது மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய அதே உத்தியை தற்போது ஈரானும் கையாண்டு வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.
தற்போதுள்ள போர் சூழலில், இந்த வழியாக எண்ணெய் கொண்டு செல்வதை நிறுத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 200 டாலரை எட்டும் என்பதால் உலகம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
