குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலா? - ஈரானிய வீராங்கனைகள் நாடு திரும்பியதன் மர்மம்!
அவுஸ்திரேலியாவில் மனிதாபிமான அடிப்படையில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஐந்து ஈரானிய கால்பந்து வீராங்கனைகள், திடீரென அந்த முடிவைக் கைவிட்டு ஈரானுக்குத் திரும்பியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆசியக் கிண்ணக் கால்பந்து தொடரின் போது, ஈரானிய தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்காமல் மௌனம் காத்தமைக்காகத் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி, இந்த வீராங்கனைகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவுஸ்திரேலிய அரசு மனிதாபிமான விசாக்களையும் வழங்கியிருந்தது.
எனினும், வழங்கப்பட்ட விசாக்களைப் புறக்கணித்த ஐந்து வீராங்கனைகளும், துருக்கி ஊடாகப் பயணம் செய்து நேற்று புதன்கிழமை மாலை ஈரானைச் சென்றடைந்துள்ளனர்.
தஞ்சம் கோரியவர்களில் இருவர் மட்டுமே இன்னும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீராங்கனைகள் நாடு திரும்புவதற்கு அவர்களின் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களே காரணம் என மனித உரிமைகள் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஈரானிய விளையாட்டு அமைச்சு, வீராங்கனைகளின் வருகையைத் தமது "தேசப்பற்றுக்குக் கிடைத்த வெற்றி" என வர்ணித்துள்ளது.
அத்துடன், அவுஸ்திரேலிய அரசு டொனால்ட் ட்ரம்ப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாகவும் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
