பிரித்தானியாவின் கோவென்ட்ரி (Coventry) பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில், குப்பைத் தொட்டிக்குள் இருந்து ஆண் ஒருவரின் உடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், கோவென்ட்ரி டெய்ம்லர் வீதிக்கு (Daimler Road) அருகிலுள்ள கேஷ் பூங்காவில் (Cash's Park) சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர், அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் மனித உடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் உடனடியாக வழங்கிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலத்தை மீட்டனர்.உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 50 வயதுடைய ஆண் எனத் தோராயமாகக் கணிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
குறித்த நபர் வேறொரு இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும், பின்னர் அவரது உடல் அடையாளத்தை மறைக்கும் நோக்கில் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்றும் புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், குற்றவாளிகளைக் கண்டறியும் நோக்கில் பூங்காவைச் சுற்றியுள்ள CCTV கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மற்றும் அந்த நேரத்தில் அப்பகுதியைக் கடந்து சென்ற வாகனங்களின் Dash Cam (டேஷ்கேம்) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தைப் பாதுகாப்பிற்கு உட்படுத்தியுள்ள காவல்துறையினர், பொதுமக்களிடம் இருந்து மேலதிக தகவல்களை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
