மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா தனது அவசர கால எண்ணெய் இருப்பைப் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளது.
ஈரானுடனான மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்காவின் மூலோபாய பெற்றோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது பெரிய அளவிலான எண்ணெய் இருப்பு விடுவிப்பாக இது கருதப்படுவதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2022ஆம் ஆண்டு யுக்ரைன் போரின் போது 180 மில்லியன் பீப்பாய் எண்ணெய் விடுவிக்கப்பட்டதே மிகப்பெரிய நடவடிக்கையாக அமைந்தது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்து, ஈரானியத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் முடங்கியுள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்கா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
