இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பப் பயிற்சிகளில் ஈடுபடும் இளைஞர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக முழுநேர வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனால், அவர்கள் பயிற்சியைப் இடைநடுவில் கைவிடும் நிலை ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்கவே பகுதிநேர வேலைக்கான சட்டப்பூர்வ அந்தஸ்து அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது எந்தவித பயிற்சியும் இல்லாத இளைஞர்களின் விகிதம் 17.2 சதவீதமாகக் காணப்பட்டுள்ளது.இதில் பெண்களின் பங்களிப்பு 22.4 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 11.9 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாகவும் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
