இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம், வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் பலவீனமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக குறித்த கடல் பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன், அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் கடல் பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படைச் சமூகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அக்கடல் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அக்காலப்பகுதியில் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
