யாழ்ப்பாணத்தில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள், நெடுந்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் வருவதை அறிந்த உரிமையாளர்களால் ஈவிரக்கமின்றி உயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் 144 புறாக்கள் நெடுந்தீவுக்குக் கடத்தி வரப்பட்டதாகவும், அவற்றை பகுதிகளாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.முதற்கட்டமாக 44 புறாக்களை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது கடற்படையினர் அவற்றை வழிமறித்து மூவரைக் கைது செய்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மீதமிருந்த புறாக்கள் நெடுந்தீவில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் அவற்றை மீட்கப் பொலிஸார் வருவதை அறிந்த வீட்டு உரிமையாளர்கள், சட்ட நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் புறாக்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், 50 இற்கும் மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்ததையும், பல புறாக்கள் கடுமையாகக் காயமடைந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாகக் கூண்டைத் திறந்ததன் மூலம் சில புறாக்கள் பறந்து சென்று உயிர் தப்பியுள்ளன.இந்த மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைத் தேடும் பணியும் நடைபெற்று வருகின்றது.
