கொழும்பின் புறநகர் பகுதியான மோதரயில் ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மீதான தாக்குதலை தந்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தை தாக்கியபோது மகள் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக சந்தேக நபரின் தாயாரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாக்கப்பட்ட சிறுமியின் தாய் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாடு சென்றிருந்ததாகவும், அங்கு தாய் செய்த செயலுக்காக பழிவாங்கும் விதமாக மகளை கொடூரமாக தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்கப்பட்ட சிறுமிக்கு 5 நாட்களுக்கு முன்பு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.34 வயது சந்தேக நபரின் தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
