மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை கம்புறுபிட்டிய பகுதியில் சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அவருடன் சென்ற தந்தை சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
சம்பவத்தில் கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளின் அதீத வேகமே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துநர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
