மழை மேகங்களை உருவாக்குவதில் தாமதம்
கடந்த 28ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்று சுழற்சி, வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் வலுக்குறைந்த நிலையில் காணப்படுகிறது.
இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் நிலைகொண்டிருந்தாலும், குறைவான கடல் மேற்பரப்பு வெப்பநிலை, வட இந்தியாவில் இருந்து வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலூடாக பயணிக்கும் வறண்ட காற்று, குழப்பமான கடல்நீரோட்டங்கள் போன்ற எதிர்மறையான புறக்காரணிகளின் தாக்கத்தின் காரணமாக கிழக்கு காற்றை ஈர்த்து வலுவடைந்து மழைமேகங்களை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுகின்றது.
எனினும் ஜனவரி 1ம் திகதி முதல் இந்துசமுத்திர நீராவிக்காற்றை ஈர்த்துக்கொண்டு சற்றே தீவிரமடைந்து ஒரு சாதாரண தாழ்வு நிலையாக மாறி இலங்கைக்கு தெற்காக, மேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக நாளை 31 முதல் அடுத்துவரும் மூன்று நாட்கள் வடக்கு மாகாணம் முழுவதும் மேகமூட்டம் மற்றும் அவ்வபோது சாதாரண மழைவீழ்ச்சியுடன் கூடிய குளிரான வானிலை நிலவுவதுடன், கிழக்கு மாகாணம், மலையகம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் ஜனவரி 4ம் திகதிவரை விட்டு விட்டு 50 மிமீ வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது மலையகம் மற்றும் கிழக்கில் தொடர் மழைவீழ்ச்சியை கொடுக்கும் அளவுக்கு தீவிர நிகழ்வாக வலுவடைய வாய்ப்பில்லை என்பதால், அவ்வப்போது அதிகரித்து காணப்படும் மழை தொடர்பில் மக்கள் பதற்றம் கொள்ளாது சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயற்படுதல் சிறப்பு.!!
