சென்னை மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியில் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (22) என்பவர் சென்னை மதுரவாயல் அருகே காயலான் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்த்தி (20) என்ற இளம்பெண்ணுடன் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் மதுரவாயல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். நேற்று காலை உறவினர்கள் சக்திவேலை செல்போனில் தொடர்பு கொண்டபோது போன் எடுக்கவில்லை. கடையும் திறக்கப்படவில்லை. வீட்டுக்கதவும் நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் தட்டியும் பயனில்லை. இதனால் மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சக்திவேலும் ஆர்த்தியும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இருவரது உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், "எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாது. இதனால் நாங்களே எங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முதற்கட்ட விசாரணையில், திருமணத்துக்குப் பிறகு உடலுறவின் போது சக்திவேலுக்கு ஆணுறுப்பில் நரம்பு முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் உடலுறவு கொள்ள முடியாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவரை அணுகாமல், குழந்தை பிறக்காது என்ற மன உளைச்சலில் இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை கடிதத்தில் சில எழுத்துப்பிழைகள் இருந்ததால், அதை அவர்களே எழுதினார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடர்கிறது. இளம் வயதில் திருமணமாகி வாழ்க்கையைத் தொடங்கிய தம்பதி இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
