பொலிசாரை வைத்து மிரட்டும் விதானை-பிடித்தவர்களுக்கு நிவாரணம்-நாவற்காடு மக்களின் அழுகுரல்..!

 

எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் எமது கிராமத்தில் நிறைய பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள் என நாவற்காடு கிராமத்தில் கிராம சேவையாளரால் பாதிக்கப்பட்ட 

மக்கள் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு இன்றையதினம் கருத்து தெரிவித்தனர். 


அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உண்மையாகவே வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நேரடியாக பார்வையிடவில்லை எனவும், வெள்ள அனர்த்த நிவாரணம் வழங்குவதிலும் முறைகேடுகள் இடம்பெறுகிறது எனவும்  முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மக்கள் குறித்த பகுதி கிராம சேவகர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கும் போது,

முள்ளியவளை வடக்கு நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 385 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., அண்மையில் பெய்த மழையால் எம் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. 


அதனை எமது கிராம சேவையாளர் நேரில் வந்து பார்வையிடவில்லை. அவரது கையாட்களை வைத்து  தமக்கு பிடித்தவர்களின் பெயர் விபர பட்டியலை எடுத்து, மாவட்ட செயலகம் ஊடாக கொடுப்பனவுகளை வழங்கியுள்ளார். 

இதனை தட்டி கேட்டால் பொலிஸாரை வரவழைத்து  மிரட்டுகின்றார். 


இதேபோன்று ஒரு பிரச்சினையை தட்டிகேட்க சென்ற இருவர் மீது தற்போது வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  மாவட்ட அரச அதிபருக்கோ, பிரதேச செயலாளருக்கோ தெரியாது.

கிராம அலுவலருக்கு தேவை நிமித்தம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாது. அவருக்கு பிடித்த ஆட்களுக்கே சலுகை வழங்கப்படுகின்றது. 


நாவற்காடு கிராமத்தில் பெண்தலைமைத்துவ, வறிய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். எமக்கு பயணம் செய்வதற்கு கூட  ஒரு பாதை இல்லை. குளம் உடைத்து, பயணம் செய்ய முடியவில்லை. அதனை சீர்செய்யவோ எம் கிராமத்தினை பார்வையிடவோ யாரும் வரவில்லை. எம் கிராம சேவையாளரின் செயற்பாட்டால் மன உளைச்சலிற்கு உள்ளாகி இருக்கின்றோம். ஆகவே இதனை கருத்தில் எடுத்து எமக்கு சரியான தீர்வினை வழங்கவேண்டும் என தெரிவித்திருந்தனர்.


இது தொடர்பாக குறித்த கிராமத்தில் வசிக்கும் இன்னொருவர் கூறும்போது,

எனது மகளுக்கு இரு சின்ன பிள்ளைகள் இருக்கின்றனர். கணவர் விட்டிட்டு போட்டார். மகளின் வீட்டுக்கு மின்சாரம் இல்லை, கதவும் இல்லை, கடந்த மழையில் வீட்டுக்கு மேல் மரம் முறிந்து விழுந்தது. அதனை கிராம சேவகர் வந்து பார்வையிட்டார். 


ஆனால் எதுவித உதவியும் கிடைக்கவில்லை. காரணம் கேட்டால்  மகள் வீட்டில் நிற்பதில்லை என கூறுகிறார். 


அதேபோன்று எனது வீட்டிற்கும் கதவு இல்லை. மழை பெய்தால் வீடு முழுவதும் ஒழுக்கு. எனக்கு கணவர் இல்லை. யுத்தத்திற்கு பின்னர் வீட்டுத்திட்டம் கூட தரவில்லை. எனக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் இருக்கின்றனர். மகன் இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதவுள்ளார். 


மருமகன்களுக்கும் ஏலாது, மகள் கிராம சேவகரிடம் கையொப்பம் இட கேட்க அவர் உங்க அம்மாவுக்கு மனநிலை  சரியில்லையா என கேட்டு அவமானப்படுத்தியுள்ளார். 


அதுமட்டுமல்ல வெள்ள அழிவு பார்க்க வேறு ஒரு வீட்டுக்கு வந்து கிராமசேவகர் காறிதுப்பிவிட்டு போய்யுள்ளார். காரணம் வீடு நாற்றமாக இருக்குதாம்.

ஏழு வருஷமா மின்சாரம் இல்லை.  இதுவரை எந்த அரச நிறுவனமோ எமக்கு ஒரு உதவிகூட வழங்கவில்லை. ஆகவே எனக்கு உதவி செய்யாவிட்டாலும் என்னைபோல் எமது கிராமத்தில் நிறைய பெண்கள் கஸ்டப்படுகின்றார்கள். அவர்களுக்காவது உதவி செய்யுங்கள்.


இது தொடர்பாக குறித்த கிராமத்தில் வசிக்கும் இன்னொருவர் கூறும் போது,

மழை காரணமாக வீடு முழுவதும் ஒழுக்கு. மரங்கள் வீட்டின் மேல் முறிந்து  விழுந்தது, வீட்டு பயிர்கள் எல்லாமே அழிவடைந்து போயிட்டு, அந்த நேரம் பாம்பு வீட்டுக்குள் வந்து எனக்கு கடித்து உயிருக்கு போராடி சுகமடைந்து வந்துள்ளேன். 


இது தொடர்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவகருக்கு அறிவித்தல் வழங்கியும் இதுவரை வந்து பார்வையிடவில்லை. எம்மை ஒதுக்கியே வைக்கின்றார்கள். எனக்கு கணவர் இல்லை. கடைசி பிள்ளைக்கு பிறப்பத்தாட்சி பத்திரம் எடுக்க சென்றபோது, என்னை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார், என்னைபோல் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.கதைப்பதற்கு அச்சப்படுகின்றார்கள். என தெரிவித்திருந்தனர்.


ஆகவே குறித்த பிரதேச செயலகத்திற்குரிய பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் நேரடியாக சென்று  ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய தீர்வுகளை உடனடியாக பெற்று கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.