உலகளவில் மிகவும் பிரபலமான தீர்க்கத்தரசிகளுள் ஒருவர் தான் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வாங்கா. இவர் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணித்து கூறும் ஆற்றலைப் பெற்றிருந்தார்.
ஆரம்பத்தில் இவரது கணிப்புக்களை யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் இவர் இரண்டாம் உலகப் போர், 9/11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் போன்றவற்றை சரியாக கணித்து கூறிய பின், ஒவ்வொரு ஆண்டில் நுழையும் போதும், அந்த ஆண்டிற்கான பாபா வாங்காவின் கணிப்பு என்னவென்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பலவற்றையும் பாபா வாங்கா கணித்துள்ளார். அதில் 2025-ல் பெரிய மோதல்கள், சோகமான சம்பவங்கள் நடைபெறும் என்றும், பேரழிவுக்கான மோதல் ஏற்படும் என்றும், புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும், ஏலியன்களின் வருகை குறித்தும் கணித்துள்ளார்.
இதில் பாபா வாங்காவின் பெரும்பாலான கணிப்புக்கள் சரியாக நடந்துள்ளன. மேலும் சமீபத்தில் பாபா பாங்காவின் இந்த ஏலியன்களின் வருகை குறித்த கணிப்பு சமூக ஊடகங்களில் தீவிரமாக டிரெண்டாகி வருகிறது. ஏனெனில் 3I/ATLAS என்ற மர்மமான பொருள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இவரது கணிப்பு உண்மையாகிறதோ என்று பலரும் கருதுகின்றனர்.
ஆனால் பாபா வாங்காவின் உண்மையான கணிப்புப்படி, மனிதகுலம் வேற்று கிரக வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ளும், இது உலகளாவிய நெருக்கடி அல்லது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூரிய மண்டலத்தை கடக்கும் மர்ம பொருள்
சிலியில் ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் சூரிய மண்டலத்தில் 3I/ATLAS என்ற மர்மப் பொருள் கடப்பதைக் கண்டறிந்தனர். அதுவும் இது மணிக்கு 1.3 லட்சம் மைல் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இது 10-20 கிமீ அளவு கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதுவும் இதன் வேகம், பாதை, அதன் தோற்றம் மற்றும் அதனால் பூமிக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் ஏற்படும் என்பது ஒரு மிகுந்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.
விண்கலமா அல்லது வால் நட்சத்திரமா?
3I/ATLAS என்ற மர்ம பொருளின் அசாதாரண அமைப்புகள் மற்றும் பண்புகள் காரணமாக, இது ஒரு வேற்றுகிரக விண்கலமாக இருக்கலாம் என்று ஹார்வர்டின் பேராசிரியர் அவி லோப் உட்பட சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதே வேளையில் மற்றவர்கள் இது ஒரு சிறு கோளாக அல்லது வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் நாசா சூரிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்ம பொருள் ஒரு வால் நட்சத்திரம் என்று கூறுகிறது.
பூமியை எப்போது நெருங்கும்?
3I/ATLAS என்ற மர்ம பொருளானது காரத்திகை 30 ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில் சுமார் 130 மில்லியன் மைல்கள் (210 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் அடையும் என்று விண்வெளி நிறுவனம் கூறுகிறது.
அப்போது இது செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அறிக்கைகளின் படி, இந்த 3I/ATLAS 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
