தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பயிர் செய்கையின் பாதிப்பை நிர்வகிக்கும் செயற்பாட்டை முறைமைப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை காப்பீட்டுத் திட்டம் உளுந்து,பச்சைப் பயறு, கௌப்பி,வேர்க்கடலை,குரக்கன், கொள்ளு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி, கௌப்பி செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 4,200 ரூபாவை காப்பீடு செய்யும் போது, இயற்கை பேரழிவுகள், நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு மற்றும் காட்டு யானைகளால் அந்த செய்கைக்கு ஏற்படும் சேதத்திற்கு ஒரு ஏக்கருக்கு 60,000 ரூபாய் காப்பீட்டை இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர பச்சைப்பயறு செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 5,600 ரூபாவை காப்பீடு செய்யும் போது, ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒரு ஏக்கருக்கு 80,000 ரூபாவை இழப்பீடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காட்டு யானைகளால் அச்சுறுத்தல் காணப்படும் மாவட்டங்களிலும் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் நோக்கில் இந்த மானிய காப்பீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.