முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாங்குளம் பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்திற்கு அமைவாக சுமார் 5000 ஏக்கர் காணியில் அமையவுள்ள தொழிற்துறை நகர மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றயதினம் (20) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பேரவை மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாங்குளம் தொழிற்துறை நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் , ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆலோசகர்கள்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ,ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் , வனவள, வன ஜீவராசிகள் திணைக்கள மாவட்ட அலுவலர்கள் , நீர்வழங்கல் வடிகால் அமைப்பு, மின்சாரசபையை சேர்ந்த அலுவலர்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அலுலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.