இலங்கை முழுவதும் சுமார் 500,000 மாணவர்கள் மற்றும் 150,000 ஆசிரியர்களுக்காக செயற்படுத்தப்பட்டு வரும் பொதுக் கல்வி நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் 50 மில்லியன் டொலர் கூடுதல் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
இந்த நிதியுதவி, கல்வி சீர்திருத்தங்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும், கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கும், பாடசாலை வசதிகளை மேம்படுத்துவதற்கும், மாணவர் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பெருந்தோட்ட சமூகங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளை ஆதரிக்கும் பாடசாலைகள் உட்பட, வசதிகள் குறைந்த பாடசாலைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த நிதி இலங்கையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான சூழலில் கற்கும் வாய்ப்பை வழங்குவதையும், ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான கருவிகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதென மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் டேவிட் சிஸ்லான் தெரிவித்துள்ளார்.
இந்த கூடுதல் நிதிகள், பணியிட ஆசிரியர் கல்வியை நவீனமயமாக்குவதற்கும், தொடர்ச்சியான ஆசிரியர் மேம்பாட்டினால் ஆசிரியர் செயற்றிறனை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கற்றலில் வலுவான கவனம் செலுத்துவதற்கும் உதவும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலை மேம்படுத்துதல், சுகாதாரம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாடசாலைகளில் மனநல ஆதரவை அதிகரித்தல் மற்றும் பாடசாலை சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தை ஆதரிப்பது ஆகியவை ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் வலுப்படுத்தும் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.