யாழ் வடமராட்சி கிழக்கு உடுத்துறை செந்தமிழ் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு நேற்று (23) இடம்பெற்றதுடன் குறித்த நிகழ்வை செய்தி சேகரிக்க சென்ற சுயாதீன ஊடகவியலாளரின் உந்துருளி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
நேற்று(23) பிற்பகல் 03.00 மணியளவில் உடுத்துறை செந்தமிழ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு முன்பள்ளி முகாமைத்துவக் குழு தலைவர் திருமதி நி.சாளினிதேவி தலைமையில் முன்பள்ளி மைதானத்தில் ஆரம்பமானது
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் விளையாட்டு நிகழ்வை பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமராட்சி கிழக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் சிறி ராமச்சந்திரன் ஆரம்பித்துவைத்தார்
முன்பள்ளி சிறார்களின் பழம் பொறுக்குதல்,பூக்கோத்தல்,நீர் நிரப்புதல்,தூண்டிலில் மீன்பிடித்தல்,ஓட்டம்,போன்ற விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன
குறித்த நிகழ்வை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன் திலைஸ் அவர்களின் உந்துருளியும் கடுமையாக சேதமாக்கப்பட்டன
அங்குவந்த இனம் தெரியாத நபர்கள் குறித்த ஊடகவியலாளரின் உந்துருளியை கத்தி மற்றும் தடிகளால் தாக்கி விட்டு தப்பிச் சென்ளுள்ளனர்
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வடமராட்சி கிழக்கில் ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றமை தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்யவேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்