யாழ் சிறைச்சாலையில் கொடூரம்; கோமாவுக்கு சென்ற தமயனுக்காக நீதி கோரும் தங்கை

 

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என சகோதரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.


யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,


நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தனாங்க, எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால் , புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 


மறுநாள் 07ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.


அதனை அடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 08ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.


நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்ற போது , 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார்.


தலையில் காயம் 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள். அண்ணா விடம் என்ன நடந்தது என ? என கேட்ட போது எனக்கு அடிச்சு போட்டாங்க என சொன்னார் , அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விடாது என்னை அங்கிருந்து அனுப்பினார்.


மறுநாள் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்த போது ,அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது பின்னர் மதியம் தலையில் ஸ்கான் பண்ணி பார்த்து எல்லாம் சரி என கூறி மாலையே வைத்திய சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது.


நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன்.


இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என. நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு , முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன்.


யாழ்ப்பாணம் சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்ட போது , மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர், பின்னர் அப்பா மாலை 06 மணிக்கு முல்லைத்தீவு பஸ் புறப்பட்டு விடும் என சிறைச்சாலையில் இருந்து , அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார்.


மறுநாள்  அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து , 


வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம். 11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 07 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர்.


வைத்தியர்களிடம் கேட்டால் , மூளையில் உள்ள சில கலங்கள் இறந்து விட்டன. அவற்றுக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின் , நோயாளி சுயநினைவுடன் இருக்க வேண்டும். அண்ணாவிற்கு சுயநினைவு திரும்பிய பின்னரே அதனை செய்ய முடியும் 05 வீதமே அதற்கு வாய்ப்பு உள்ளது என கூறி விட்டனர்.


அண்ணாவிற்கு என்ன நடந்தது என வைத்தியர்களிடம் கேட்ட போது, அதனை தாம் அனுமானிக்க முடியாது என கூறினார்கள். முல்லைத்தீவில் இருந்து தினமும் வந்து போவது சிரமம் என கூறிய போது, அண்ணாவை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் என வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றார்கள்.


உண்மையில் அண்ணாவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் , வைத்தியர்களும் கூறுகின்றார்கள் இல்லை. சிறைச்சாலை நிர்வாகமும் கூறுகின்றார்கள் இல்லை. எமக்கு இது தொடர்பிலான உண்மையை கூற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.