உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
கிணற்றில் இரவு முழுதும் தேடப்பட்ட 3 வயது குழந்தை.. கலங்கி நின்ற போலீஸ்.. குழந்தை திரும்பி வந்தது எப்படி..? அமானுஷ்ய தகவல்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள வி. மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி கிரித்திஷா, வீட்டை விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அடுத்த நாள் அதிகாலையில் அருகிலுள்ள சோளக்காட்டில் அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வி. மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் - ஆர்த்தி தம்பதியருக்கு கிரித்திஷா என்ற மகள் உள்ளார்.
ஆர்த்தியின் தந்தை உயிரிழந்த பிறகு, குடும்பம் ஆர்த்தியின் தாயார் வீட்டில் வசித்து வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஹரிஹரன் கொத்தனார் வேலைக்குச் சென்றார். ஆர்த்தியின் தாயாரும் ஆடு மேய்க்க வெளியே சென்றார். வீட்டில் ஆர்த்தியும் அவரது மகளும் மட்டும் இருந்தனர்.
மாலை 5 மணி அளவில், ஆர்த்தி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார்.
திரும்பி வந்தபோது, குழந்தை வீட்டில் இல்லாதது தெரியவந்தது. உடனடியாக அருகிலுள்ள பகுதிகளில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
இதையடுத்து, ஆர்த்தி தனது கணவருக்கும் தாயாருக்கும் தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் அருகிலுள்ள கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை தொடங்கினர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டபோது, குழந்தை வீட்டிலிருந்து அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்தத் திசையில் தேடுதல் நடத்தினர். அங்கு பெரிய கிணறு இருப்பதைக் கண்டறிந்தனர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் சென்சார் கருவிகள் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி இரவு முழுவதும் தேடுதல் நடத்தினர். இருப்பினும், குழந்தை கிடைக்கவில்லை.
அடுத்த நாள் அதிகாலையில், குழந்தையின் தந்தை ஹரிஹரன் அருகிலுள்ள வயலில் தேடியபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அப்போது, அருகிலுள்ள ஒருவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தார். அந்த நபர், தனக்குச் சொந்தமான சோளக்காட்டுக்கு (வீட்டிலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில்) தண்ணீர் பாய்ச்சச் சென்றபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டதாகக் கூறினார்.
முந்தைய இரவு குழந்தை மாயமான செய்தி அறிந்திருந்ததால், அது அவர்களுடைய குழந்தை எனக் கண்டறிந்து கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
3 வயது குழந்தை எப்படி 1.5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றது? இரவு முழுவதும் யார் கண்ணிலும் படாமல் எப்படி இருந்தது? போலீசார் தரப்பில், அப்பகுதி வயல்வழியாக இருப்பதால் குழந்தை வழிதெரியாமல் சென்றிருக்கலாம் என்றும், அழுது களைத்து மயங்கியிருக்கலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க, வீட்டில் குழந்தைகள் இருக்கும்போது பெற்றோர்கள் அவர்களை கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.