கொழும்பில் முன் பதிவு செய்துவிட்டு யாழ் பேருந்துக்காக காத்திருந்தவர்களை ஏற்றாது நள்ளிரவில் அத்ந்தரிக்க விட்டு சென்ற இ.போ.ச பேருந்து தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முன் பதிவு செய்த பயணிகள் நிற்பதை அவதானித்தும்கூட , சாரதியும் , நடத்துனரும் அவர்களை உதாசீனம் செய்து ஏற்றாது சென்றதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு 10.30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த பேருந்தில் , நீர்கொழும்பு பகுதியில் நின்று ஏறுவதற்காக மூவர் ஆசனங்களை முற்பதிவு செய்து விட்டு பேருந்துக்காக காத்திருந்தனர்.
அதன் போது, பேருந்தின் நடத்துனர் இரவு 11.45 மணியளவில் பேருந்து குறித்த இடத்திற்கு வரும் என பயணிகளுக்கு அறிவித்திருந்தார்.
அதனை அடுத்து பயணிகள் பேருந்துக்காக அவ்விடத்தில் காத்திருந்த போதும் 11.30 மணியளவிலும் தாம் பேருந்துக்காக காத்திருப்பதனை தொலைபேசி ஊடாக நடத்துனருக்கு பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கும் நடத்துனர் அருகில் வந்து விட்டோம் 11.45 மணியளவில் அவ்விடத்தை வந்தடைந்து விடு வோம் என கூறியுள்ளார். அந்நிலையில் 11.45 மணிக்கு குறித்த பேருந்து அவ்விடத்தினை தாண்டி சென்றுள்ளது.
பயணிகள் மூவரும் பேருந்தினை வழி மறித்த போதிலும் , பேருந்தினை அவ்விடத்தில் நிறுத்தாது சாரதி தொடர்ந்து பயணித்துள்ளார். அதனை அடுத்து பயணிகள் நடத்துனருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போதிலும் , நடத்தினர் தொலைபேசி அழைப்பினை ஏற்கவில்லை.
அந்நிலையில் சுமார் 30 நிமிடங்கள் கழித்து தொலைபேசி அழைப்பினை எடுத்த நடத்துனர் , பேருந்து குறிப்பிட்ட இடத்தில் நிற்பதாகவும் , அங்கு வந்து பேருந்தில் ஏறுமாறும் கூறியுள்ளார்.
