கிளிநொச்சி நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில், சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.
தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண்ணே உயிரிழந்ததுடன், தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மனைவியின் இறுதி சடங்கிற்கு கணவன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வரவழைக்கப்பட்ட அவரது கண் முன்னே மனைவி அடக்கம் செய்யப்பட்ட சோக சம்பவம் இடம்பெற்றது.